சென்னை: சட்டம் -ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பொதுமக்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களின் முழு பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே அனுமதி வழங்க வேண்டும் என்று டிஜிபி அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான பெங்களூரு புகழேந்தி மற்றும் அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் டிஜிபி அலுவலகத்தில் நேற்று அளிக்கப்பட்டுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: பொதுக்குழு கூட்டம் கடந்த 12ம் அன்று கட்சி தலைமை மற்றும் தலைவர்களால் அறிவிக்கப்பட்டது. அதில் இருந்து இரு தலைவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் இடையே கடும் பதற்றம் ஏற்பட்டது.இந்நிலையில் வரும் 23ம் தேதி பொதுக்குழு கூட்டத்திற்கு பார்வையாளர்களாகவும், உறுப்பினர்களாகவும் சுமார் 1 லட்சம் உறுப்பினர்கள் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி பேலஸ் மற்றும் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்துக்கு அருகே கூட உள்ளனர். தெரிந்தோ தெரியாமலோ கடந்த வாரத்தில் இருந்து கட்சிக்கு ஒற்றைத் தலைமை என்பது பெரும் விவாத பொருளாகி, தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று அடைந்துவிட்டது. கட்சி தலைவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது எப்போது வேண்டுமானாலும் வகுப்புவாத கலவரமாக மாறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். பொதுக்குழு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே சட்டம் -ஒழுங்கு பிரச்னைகள் தொடர்கதையாகி வருகின்றன. இப்போது குண்டர்கள் கட்சிக்காரர்களின் நிழலை பெற்று, தமிழகம் முழுவதும் கூடங்குளம் பிரச்னைகளை போன்று ஒரு வகுப்புவாதத்தையும் தூண்டி மிகப்பெரிய சட்டம் -ஒழுங்கு பிரச்னையை அரங்கேற்ற காத்திருக்கிறார்கள். இனிமேல் தமிழக காவல்துறை மற்றும் தமிழக அரசு பொதுக்குழு கூட்டத்துக்கு வரும் பொதுமக்கள் மற்றும் கட்சியினருக்கு முழு பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே நடத்த அனுமதிக்க வேண்டும். அல்லது ஒத்திவைக்க வேண்டும். இதை முறையாக செல்படுத்தவில்லை என்றால் தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறைக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தி, தமிழக வரலாற்றில் மேலும், ஒரு கருப்பு தினமாக மாறும் நிலை ஏற்பட்டுவிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….