நத்தம், ஜூலை 7: நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள விநாயகர் சன்னதியில் ஆனி மாத சங்கடஹர சதுர்த்தி பூஜைகள் நேற்று நடந்தது. இதில் விநாயகருக்கு அருகம்புல், மல்லிகை, ரோஜா, போன்ற மாலைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். அருகில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும், காமாட்சி மவுன குருசாமி மடத்திலும் பக்தர்கள் வழிபாடு செய்தனர். இதேபோல் நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் இருக்கும் விநாயகர் சன்னதியிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.