கோவை, பிப். 8: கோவை மத்திய மற்றும் துடியலூர் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துறை கமிஷனர் சண்முகசுந்தரம் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதில், மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி நடந்த மருத்துவ முகாமை பார்வையிட்டார். மேலும், அலுவலக பணிகளை பார்வையிட்டவர் பல்வேறு அறிவுரைகளை அதிகாரிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து, துடியலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர், துடியலூர் அலுவலகத்திற்கு புதிதாக விளாங்குறிச்சி பகுதியில் ஏற்படுத்தப்பட உள்ள அலுவலகத்திற்கான இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.
தொடர்ந்து, ரேஸ்கோர்சில் கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டத்தை சேர்ந்த ஆர்டிஓ-க்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது சாலை விபத்துகளை குறைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது, இணை ஆணையர் சிவகுமரன், ஆர்டிஓ-க்கள் சத்யகுமார், சிவகுருநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.