கோவை, நவ.10: தமிழக அரசு கனரக வாகனங்களுக்கான காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் கோவை லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஈடுபட்டனர். இது குறித்து கோவை லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் முருகேசன், செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் கூறியதாவது:
தமிழகத்தில் 4.50 லட்சம் லாரிகள் இயங்கி வந்த நிலையில், கொரோனா தொற்று காலத்திற்கு பின் தொழில் நெருக்கடி மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வு, சுங்க கட்டணம் அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது 2.50 லட்சம் எண்ணிக்கையான லாரிகள் மட்டும் இயங்குகின்றன. லாரி தொழில் நாளுக்கு நாள் அழிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில், லாரிகளுக்கு பசுமை வரியாக 500 ரூபாயிலிருந்து 750 ரூபாயாக உயர்த்தி உள்ளது. அத்துடன் லாரிகளுக்கான காலாண்டு வரியில் 40 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆன்லைனில் அபராதம் விதிப்பதை ரத்து செய்யக் கோரியும், மாநில அரசு தெரிவித்துள்ள 32 கால பதிவான சுங்க சாவடிகளை அகற்ற கோரியும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகளை இயக்காமல் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளோம். அதன்படி, மாவட்டத்தில் 2,500 லாரிகள் இயக்கப்படவில்லை. அரசின் கவனத்தை ஈர்க்க இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். எனவே, அரசு எங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.