தூத்துக்குடி, ஏப்.5:கோவில்பட்டியில் காரில் கடத்திய 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு எஸ்ஐ பாரத்லிங்கம் தலைமையில், ஏட்டுகள் பூலையா நாகராஜன், கந்தசுப்பிரமணியன் ஆகியோர் கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை நடத்தினர். அந்த காரில் தலா 40 கிலோ எடை கொண்ட 20 சாக்கு மூடைகளில் சுமார் 800 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசியை கடத்தி வந்ததாக கோவில்பட்டி காந்திநகரைச் சேர்ந்த அலங்கார முத்துபாண்டியன் மகன் சுந்தர்(26) என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், ரேஷன் அரிசியை சேகரித்து கோழி, பன்றி தீவனத்திற்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இது தொடர்பாக தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.