அண்ணா நகர், ஜன.30: கோயம்பேடு காய்கறி, பூ மார்க்கெட்டில் உரிமம் புதுப்பிக்க தவறிய 14 கடைகளுக்கு அங்காடி நிர்வாகம் சார்பில் சீல் வைத்தனர். கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் உரிமம் புதுப்பிக்காமல் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருவதாக அங்காடி நிர்வாக அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி தலைமையில் அதிகாரிகள் கோயம்பேடு மார்க்கெட்டில் ஆய்வு செய்தனர். அதில் உரிமம் புதுப்பிக்காத கடைகள் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.
உடனே அங்காடி நிர்வாக சார்பில், கடை உரிமம் புதுப்பிக்க வலியுறுத்தி, அதன் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு பலமுறை எச்சரித்தனர். இருப்பினும் வியாபாரிகள் உரிமத்தை புதுப்பிக்கவில்லை. இதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் 21ம் தேதி முதல்கட்டமாக அங்காடி நிர்வாகம் சார்பில் 8 கடைகளுக்கு சீல் வைத்தனர். அப்போது சில வியாபாரிகள் கடையின் உரிமத்தை புதுப்பித்தனர். இந்நிலையில், உரிமம் புதுப்பிக்க தவறியதால் இரண்டாம் கட்டமாக அதே மாதம் 25ம் தேதி மேலும் 7 கடைகளுக்கு சீல் வைத்தனர்.
இந்நிலையில் நேற்று 3ம் கட்டமாக கோயம்பேடு காய்கறி மற்றும் பூ ஆகிய மார்க்கெட்டில் கடை உரிமம் புதுப்பிக்க தவறிய 14 கடைகளுக்கு அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் தலைமையில் அதிகாரிகள் சீல் வைத்தனர். இதுகுறித்து கோயம்பேடு அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் கூறுகையில், ‘‘கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் உரிமம் புதுப்பிக்க தவறியதால் கடந்த டிசம்பர் மாதம் 15 கடைகளுக்கு சீல் வைத்தோம்.
இதனால் சில வியாபாரிகள் கடையின் உரிமம் புதுப்பித்தனர். ஆனால் சில வியாபாரிகள் மீண்டும் புதுப்பிக்க தவறிய பட்சத்தில் 3ம் கட்டமாக மேலும் 14 கடைகளுக்கு சீல் வைத்துள்ளோம். இதுவரை 29 கடைகளுக்கு சீல் வைத்துள்ளோம் மீதமுள்ள கடைகளின் உரிமம் புதுப்பிக்க தவறினால் அனைத்து கடைகளுக்கும் விரைவில் சீல் வைக்கப்படும்,’’ என்றார்.