Sunday, May 12, 2024
Home » கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவதன் தாத்பரியம் என்ன?

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவதன் தாத்பரியம் என்ன?

by kannappan
Published: Last Updated on

?கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவதன் தாத்பரியம் என்ன?தரிசித்து புண்ணியம் தேட வேண்டும் என்பதே இந்த சொற்றொடருக்கான பொருள். இறப்புத் தீட்டினால் ஆலயத்திற்குள் வர இயலாதோர், பணிச்சுமையின் காரணமாக உண்டாகும் நேரமின்மையால் அவதிப்படுவோர், பேருந்து மற்றும் இதர வாகனங்களில் பயணிப்போர் உள்பட கோடானுகோடி ஆன்மிக அன்பர்கள் அனைவரும் தரிசிப்பதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டதே ராஜகோபுரங்கள். ஊரின் எல்லைக்குள் நுழையும்போதே அந்த ஊரில் அமையப்பெற்ற ஆலயத்தின் கோபுரம் நம் கண்ணில்படும்போது நம்மையும் அறியாமல் நமக்குள் ஒருவித பக்தி உணர்வு தோன்றுகிறது, கைகள் தானாக கன்னத்தில் போட்டுக் கொள்கிறது. அந்த ஆலயத்தினுள் உறைந்திருக்கும் இறைசக்தியே கோபுரத்திலும் எதிரொலிக்கிறது. தினசரி செய்தித்தாளை படிக்க இயலாதவன் கடைகளில் வெளியில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் விளம்பரத் தாள்களில் கொட்டை எழுத்தினில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் தலைப்புச் செய்திகளைப் படித்து அறிந்து கொள்கிறான். ஆனால், முழுமையான விவரத்துடன் செய்திகளை அறிந்து கொள்ள வேண்டுமென்றால் நாளிதழை வாங்கிப்படித்தால்தான் அந்தச் செய்திக்கான முழுமையான அர்த்தம் புரியும். அவ்வாறே கோபுர தரிசனம் என்பது மேலோட்டமாக செய்திகளைத் தெரிந்து கொள்வது, உள்ளிருக்கும் சங்கதிகளை முழுமையாக உணர ஆலயத்திற்குள் சென்று உள்ளிருக்கும் இறைவனையும் தரிசித்தால்தான் முடியும், ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக எல்லோருக்கும் அந்த பாக்கியம் கிட்டுவதில்லை. அதேநேரத்தில் அனைத்துத் தரப்பு பக்த கோடிகளுக்கும் கோபுர தரிசனம் என்பது எளிதில் கிடைப்பதால் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள்.?மூன்று சகோதரர்கள் ஒன்றாக சிராத்தம் செய்யலாமா அல்லது தனித்தனியே சிராத்தம் செய்ய வேண்டுமா?சகோதரர்கள் ஒன்றாக இணைந்து வசிக்கும் பட்சத்தில் ஒன்றாகவே சிராத்தம் செய்யலாம். வெவ்வேறு ஊர்களில் தனித்தனியே வசிப்பவர்கள் என்றால் தனித்தனியாகத்தான் சிராத்தம் செய்ய வேண்டும். பாகம் பிரிந்துவிட்டாலே சிராத்தமும் தனிதான் என்பதை சாஸ்திரம் உறுதியாகச் சொல்கிறது. பாகம் என்றால் சொத்தில் பாகப்பிரிவினை என்று பொருள்காணக் கூடாது. பாகம் என்றால் சமையல் என்று பொருள்.நல்ல ருசியாக சமைப்பதை நளபாகம் என்று சொல்லக் கேட்டிருப்போம். ஆக இங்கே பாகம் என்ற வார்த்தைக்கு சமையல் என்று பொருள். தனித்தனியே சமையல் செய்து சாப்பிடுபவர்கள் என்றால் சகோதரர்கள் எல்லோரும் தனித்தனியேதான் சிராத்தம் செய்ய வேண்டும். அதேபோல நாம் எங்கு குடியிருக்கிறோமோ அங்கேதான் சிராத்தம் செய்ய வேண்டும். அதாவது நாம் எங்கு சமைத்து சாப்பிடுகிறோமோ அந்த இடத்தில்தான் சிராத்தத்தையும் செய்ய வேண்டும். ?கிரஹணத்தின்போது உணவு பாத்திரங்கள் மற்றும் குடிநீர் ஆகியவற்றில் தர்ப்பை எனும் புல்லை கிள்ளிப் போடுகிறார்கள். தர்ப்பை புல்லின் இதுபோன்ற விசேஷ சக்திகளைப் பற்றி தெளிவாகக் கூறுங்கள்.தர்ப்பை என்பது புனிதத்தன்மை அளிக்கக்கூடியது. அசுத்தத்தை நீக்குவதோடு மட்டுமல்லாது மந்திரத்தினுடைய சக்தியை உள்ளிழுத்துக் கொள்ளும் திறன் கொண்டது. மேலும், நம் உடலிற்கு கேடு விளைவிக்கும் கதிர்வீச்சில் இருந்து நம்மைக் காக்கும் திறன் கொண்டது தர்ப்பைப்புல் என்பதை விஞ்ஞானிகளே ஒத்துக் கொள்கிறார்கள். எனவேதான் கிரஹண காலத்தில் நம் வீடுகளில் தண்ணீர், மாவு உள்பட அனைத்து பாத்திரங்களிலும் நம் முன்னோர்கள் தர்ப்பையைப் போட்டு வைத்தார்கள். எல்லா சடங்குகளிலும் தர்ப்பையை உபயோகப்படுத்துகிறார்கள். பூஜையின்போது தர்ப்பையால் செய்த பாய்தனை ஆசனமாகப் போட்டு அதன் மேல் அமர்ந்துகொண்டு பூஜை செய்கிறார்கள். இது மட்டுமல்லாது தர்ப்பையானது ஒரு சிறந்த ரிசீவர். இந்து மத சடங்குகளில் கலசம் வைக்கும்போது அதில் தர்ப்பையால் செய்யப்பட்ட கூர்ச்சத்தினையும் வைத்திருப்பதைக் காண முடியும். இந்த கூர்ச்சம் ஆனது ஒரு ஏரியல் டவர் போல செயல்பட்டு வெளியில் உச்சரிக்கும் மந்திரத்தின் சக்தியை உள்ளிழுத்து கலசத்திற்குள் இருக்கும் நீருக்குள் கொண்டு சேர்க்கிறது. ஆலயங்களில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவின்போது கூட யாகசாலை மேடையில் வைக்கப்பட்டிருக்கும் கலசங்களில் இருந்து மேலே உள்ள விமானக் கலசம் முதல் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் சிலைபிம்பம் வரை தர்ப்பைக் கயிற்றினால் இணைத்திருப்பார்கள். யாகசாலையில் செய்யப்படும் யாகாதி கிரியைகளின் பலன் ஆனது தர்ப்பைக்கயிற்றின் வழியாக மூலஸ்தானத்திற்குள் இருக்கும் சிலையிடம் சேர்ந்து அதன் சாந்நித்தியைக் கூட்டுகிறது. சிறப்பு பூஜைகள் முதல் முன்னோர் வழிபாடு வரை தர்ப்பையால் செய்த பவித்திரத்தினை மோதிர விரலில் அணிந்துகொண்டு செய்கிறோம். பவித்திரம் என்றால் புனிதமானது என்று பொருள். மோதிர விரலில் பவித்திரத்தை அணியும்போது ரத்த ஓட்டம் சீரடைகிறது. நமது மனமும் சிந்தனைச் சிதறல் ஏதும் இன்றி செய்யும் சடங்குகளில் ஒன்றுகிறது. தர்ப்பைப் புல்லின் மகத்துவத்தை அனுபவித்துத்தான் உணர இயலுமே அன்றி வார்த்தையில் சொல்லி மாளாது….

You may also like

Leave a Comment

3 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi