ஈரோடு : சுட்டெரிக்கும் கோடை வெயில் மற்றும் கழிவு நீர் கலப்பால் ஈரோடு காலிங்கராயன் வாய்க்காலில் மீன்கள் இறந்து மிதந்து வருகிறது. ஈரோடு காலிங்கராயன் வாய்க்காலில் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதையொட்டி கடந்த 21ம் தேதி முதல் பாசனத்திற்கான தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து வாய்க்காலில் தண்ணீர் முழுமையாக வடிந்து சேறும், சகதியுமாக இருந்தது. இதைத்தொடர்ந்து மாநகராட்சியின் குடியிருப்புகளின் கழிவு நீர் மட்டும் வாய்க்காலில் கலந்து வருகிறது. மேலும், சுட்டெரிக்கும் கோடை வெயிலின் காரணமாகவும், கழிவு நீரினாலும் வாய்க்காலில் உள்ள மீன்கள் இறந்து மிதக்கிறது. இதில், ஈரோடு வைராபாளையத்தில் ஓடும் காலிங்கராயன் வாய்க்காலில் பல்வேறு பகுதிகளில் நேற்று மீன்கள் இறந்து மிதப்பதால், அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே, காலிங்கராயன் வாய்க்காலில் நடந்து வரும் மேம்பாட்டு பணியின் நிதியிலேயே, குடியிருப்புகளின் கழிவு நீர் கலக்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்களும், விவசாயிகளும் பொதுப்பணித்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். …