திருவாரூர், மார்ச் 12: திருவாரூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் போக்குவரத்து போலீசாருக்கு கோடை வெயிலை கருதி நீர்மோர் மற்றும் தர்பூசணி பழங்கள் வழங்கும் பணியை எஸ்.பி ஜெயக்குமார் துவக்கி வைத்தார். தமிழகத்தில் நடப்பாண்டில் கோடை வெயில் தற்போதே கொளுத்த தொடங்கி விட்டது. இதனால் சாலைகளில் பொது மக்கள் தற்போதே குடை பிடித்துச் செல்லும் நிலை இருந்து வருகிறது. வெயில் காலத்தில் வழக்கத்தை விட கூடுதலான அளவில் மனிதர்களுக்கு உடலில் வெப்பம் அதிகரிப்பதையொட்டி காய்ச்சல், அம்மை, மயக்கம் மற்றும் சரும நோய்கள் உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த கோடை வெயிலின் போது மனிதர்கள் தங்களை வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக இளநீர், தர்பூசணி பழங்கள், வெள்ளரிப்பிஞ்சுகள், நீர்மோர் உள்ளிட்டவற்றை அருந்துவது வழக்கம்.
இந்நிலையில் நோய்களிலிருந்து பொது மக்கள் தங்களை பாதுகாத்துகொள்ள அதிகளவில் நீர் அருந்துவதுடன், நீர் சத்து அதிகம் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை தினந்தோறும் சேர்த்துகொள்ள வேண்டும், பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை தவிர்த்துகொள்ள வேண்டும் என்று சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த கோடை வெயில் கொடுமை கருதி திருவாரூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் போக்குவரத்து போலீசாருக்கு நீர்மோர் மற்றும் தர்பூசணி பழங்கள் வழங்க மாவட்ட காவல் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று திருவாரூர் நகரில் எஸ்.பி ஜெயக்குமார் நீர்மோர், தர்பூசணி பழங்களை வழங்கினார்.இந் நிகழ்ச்சியில் டி.எஸ்.பி மணிகண்டன், இன்ஸ்பெக்டர்கள் மோகன், சரவணன் உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர்.