கொள்ளிடம், மார்ச் 24: கொள்ளிடம் சோதனை சாவடியில் தேர்தலை முன்னிட்டு தொடர்ந்து இரவும் பகலும் வாகன சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலிருந்து சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலத்தின் துவக்க பகுதியில் சோதனை சாவடி அமைந்துள்ளது. வழக்கமாக இந்த சோதனை சாவடியில் இரவும் பகலும் போலீசார் பணியில் இருந்து வாகன சோதனயில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு வாகன சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது. இதனால் சோதனை சாவடியில் உள்ள போலீசார் அனைத்து வகையான வாகனங்களையும் நிறுத்தி ஆய்வுக்கு பின்னரே அனுப்பி வைக்கின்றனர்.
தேர்தல் நிலை குழு கண்காணிப்பு அலுவலர் ராஜராஜன் மற்றும் சுகமதி ஆகியோர் தலைமையில் அமைந்துள்ள இரண்டு கண்காணிப்பு குழுக்களும் தேர்தல் பறக்கும் படையும் உரிய இடங்களில் வாகனங்களை நிறுத்தி ஆய்வு
பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று தேர்தல் நிலைக்குழு கண்காணிப்பு அலுவலர் ராஜராஜன் தலைமையில் போலீசார் கொள்ளிடம் சோதனை சாவடியில் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை என் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கைப்பை வைத்திருந்தாலே அதனையும் தீவிர பரிசோதனைக்கு பிறகு அனுப்பி வைத்தனர்.