செய்யூர்,செப். 14: மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் மனுநீதி நாள் முகாம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம், கொள்ளம்பாக்கம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் கலந்துகொண்டு ₹55.74 லட்சம் மதிப்பீட்டில், 80 பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் திருமண உதவித்தொகை, இயற்கை மரணம், குடும்ப அட்டை, விவசாய இடுப்பொருட்கள், பழ செடிகள் தொகுப்பு, விலையில்லா சலவைப் பெட்டிகள் மற்றும் தையல் இயந்திரங்கள், பழங்குடியினர் நல வாரிய அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து பல்வேறு மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் செயல்பட்டு வரும் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தினை ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில், திமுக ஒன்றிய செயலாளர் பொன்.சிவகுமார், மாவட்ட கவுன்சிலர் ராஜாராமகிருஷ்ணா, ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.