தேனி : போடி கொட்டக்குடி ஆற்றில் இருந்து கால்வாய் அமைத்து கண்மாய்களுக்கு தண்ணீரை திருப்பி விட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். தேனி மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பாண்டியன் தலைமையில், பூதிப்புரம் சங்கத் தலைவர் நடராஜன் செயலாளர் செல்வக்குமார், பொம்மையக்கவுண்டன்பட்டி சங்கத் தலைவர் கருப்பசாமி, விவசாயிகள் ராஜகோபால், சுக்குவாடன்பட்டி மா விவசாயிகள் சங்கத் தலைவர் சுருளி ஆகியோர் நேற்று போடி கொட்டக்குடி ஆற்றில் ஆய்வு செய்தனர். இதுகுறித்து விவசாயிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேனி அருகே உள்ள பூதிப்புரம் கண்மாய், அல்லிநகரம் கண்மாய், பொம்மையக்கவுண்டன்பட்டி கண்மாய், அன்னஞ்சி ஓடை கண்மாய் ஆகிய கண்மாய்களுக்கு கொட்டக்குடி ஆற்றில் உள்ள டபேதார் அணை பிரிவில் இருந்து கால்வாய் அமைத்து தண்ணீரை திருப்பி விட்டால், இக்கண்மாய்களுக்கு நீராதாரம் கிடைக்கும். இதன்மூலமாக இக்கண்மாய்களுக்கு அருகில் உள்ள சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மோட்டார் பம்ப் செட் கிணறுகளுக்கு நீர் ஊற்று கிடைத்து விவசாயம் மேம்படும். இப்பகுதிகளில் உள்ள கிணறுகள் வறண்டு விட்டன. ஆள்துளைக்கிணறுகளில் ஆயிரம் அடிக்கு மேல் நீர்மட்டம் கீழிறங்கி விட்டது. இதனால் விவசாயிகள் விவசாயம் செய்ய வழியின்றி நிலத்தை வீட்டுமனையிடங்களாக மாற்றும் அவலம் உள்ளது. எனவே, அரசு கொட்டக்குடி ஆற்றின் டபேதார் அணைப்பிரிவில் இருந்து புதிய கால்வாய் அமைத்து, கண்மாய்களுக்கு நீர்வரத்தினை ஏற்படுத்த வேண்டும், என்றனர்….