கொடைக்கானல், நவ. 6: கொடைக்கானலில் நேற்று முன் தினம் இரவு முழுவதும் தொடர்ந்து பெய்த மழையால், மண்சரிவு ஏற்பட்டு மின்கம்பங்கள் சாய்ந்தன. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று முன் தினம் இரவு, விடிய விடிய மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டத்திலேயே கொடைக்கானல் மலைப்பகுதியில் 45 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. தொடர்ந்து பெய்த மழையினால், கொடைக்கானல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்த தொடர் மழை காரணமாக சீனிவாசபுரம் அருகே மண் சரிவு ஏற்பட்டு, சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த இரண்டு மின் கம்பங்கள் சாலையின் குறுக்கே விழுந்தன. இதனால் இந்த பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இரவு நேரத்தில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த பகுதி முக்கிய குடியிருப்பு பகுதியாகவும், சுற்றுலா பயணிகள் சென்று வரக்கூடிய பகுதியாகவும் இருந்து வருகிறது. மின்கம்பங்கள் ரோட்டின் குறுக்கே விழுந்த காரணத்தால் இந்த பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது. இதனையடுத்து மின்வாரியத்தினர் மின்கம்பங்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.