கொடைக்கானல், அக். 29: கொடைக்கானலின் பல்வேறு பகுதிகளில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கஞ்சா, போதை காளான் விற்று வருவது தொடர்கதையாக உள்ளது. இதனை தடுக்கும் விதமாக கொடைக்கானல் போலீசார் அடிக்கடி சோதனைகள் நடத்தி பலரையும் கைது செய்து உள்ளனர். இந்நிலையில் நேற்று கொடைக்கானல் அடுக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்ஐ கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் ஒருவர் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்ததில் அவர் அடுக்கம் பாலமலையை சேர்ந்த சுப்பிரமணி (65) என்பதும், அவரது பையில் 450 கிராம் கஞ்சா வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சுப்பிரமணியை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.