கொடைக்கானல்: கொடைக்கானல் ஏரிச்சாலையில் இளைஞர்கள் டூவீலர்களில் ரேஸ்கள் நடத்துவதால் சுற்றுலா பயணிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன்பு போலீசார் இதை தடுத்து நிறுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக கொடைக்கானலுக்கு டூவீலர்களில் வரும் இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இவ்வாறு டூவீலர்களில் வருபவர்கள் கொடைக்கானல் ஏரி சாலையில் ரேஸ்கள், சாகசங்கள் நடத்துவது தொடர்ந்து வருகிறது. ஏரி சாலையில் டூவீலர்கள் மூலம் செய்யப்படும் ரேஸ்கள், சாகசங்களால் அப்பகுதியில் செல்லக்கூடிய சுற்றுலா பயணிகள் அச்சப்படும் நிலை உருவாகிறது. மேலும் அடிக்கடி விபத்தில் சிக்கியும் வருகின்றனர். இதேபோல் கொடைக்கானலை சேர்ந்த இளைஞர்களும் ஏரி சாலையில் அடிக்கடி ரேஸ்கள் நடத்தி வருகின்றனர். எனவே போலீசார் ஏரி சாலையில் டூவீலர்களில் ரேஸ் செல்வதை தடுத்து நிறுத்துவதுடன், வாகனங்கள் செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….