கொடைக்கானல், மார்ச் 16: கொடைக்கானல் உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது. இந்த நெரிசலில் சிக்கி பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாமல், உள்ளூர் மக்களும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதற்காக பல முறை ஆலோசனை மேற்கொண்டும் கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல் என்பது மட்டும் தீராத பிரச்னையாகவே இருந்து வருகிறது. இதற்கு காரணம் கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் மற்றும் சாலைகள் ஆக்கிரமிப்பில் சிக்கியிருப்பதே ஆகும்.
குறிப்பாக வெள்ளி நீர்வீழ்ச்சி, பசுமை பள்ளத்தாக்கு, லாஸ்காட் சாலை பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் உள்ளதால் வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே இப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை தடுக்க ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.