போடி, ஜூன் 13: போடியில் கேரள மாநில லாரி மோதி டூவீலரில் சென்ற முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் லாரி டிரைவரை கைது செய்தனர். போடி புதூரைச் சேர்ந்தவர் அலாவுதீன்(65). இவர் நேற்று தனது டூவீலரில் புதூரிலிருந்து டவுனுக்குள் செல்வதற்காக முந்தல் – போடி சாலையில் உள்ள சின்ன வாய்க்கால் பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது கேரளாவில் இருந்து போடி மெட்டு வழியாக தேனிக்கு செல்வதற்காக வந்து கொண்டிருந்த டிப்பர் லாரி அவரது டூவீலர் மீது மோதியது.
இந்த விபத்தில் தவறி விழுந்த அலாவுதீன் மீது லாரியின் பின்புற டயர் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த போடி நகர் போலீசார் அலாவுதீன் உடலை மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பூப்பாறையை சேர்ந்த ஜேசுதாஸ் என்பவரை கைது செய்தனர்.