ஊட்டி, நவ. 18: கேசினோ – டிபிஓ., சந்திப்பு சாலையில் ஒரு புறம் மட்டும் வாகனங்கள் நிறுத்த காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதால் வாகன ஓட்டுநர்கள் நிம்மதியடைந்துள்ளனர். ஊட்டிக்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அதேபோல், பல்வேறு தேவைகளுக்காக கிராமப்புறங்களில் இருந்து நாள் தோறும் பல்லாயிரம் மக்கள் ஊட்டி நகருக்குள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்த போதுமான பார்க்கிங் வசதிகள் இல்லாத நிலையில், நகரை ஒட்டியுள்ள சாலைகளில் தங்களது வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர்.
குறிப்பாக, கேசினோ சந்திப்பு முதல் டிபிஓ சந்திப்பு வரை உள்ள சாலையில் இரு புறங்களிலும் வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர். வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை நேரங்களில் பலரும் நகருக்குள் வரும் போது, இச்சாலையில் இரு புறங்களிலும் கார்களை நிறுத்திக் கொள்வதால், இச்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. வாகனங்கள் ஒன்றிற்கு ஒன்று இடம் கொடுக்க முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பித்து விடுகிறது.
இது தொடர்பாக தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதனை தொடர்ந்து, காவல்துறையினர் இச்சாலையில் ஒரு புறம் மட்டும் வாகனங்கள் நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இது வாகன ஓட்டுநர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. எனினும், இப்பகுதியில் தொடர்ந்து காவல்துறையினர் பணியில் இருந்தால் மட்டுமே இதனை நடைமுறைப்படுத்த முடியும். இல்லையெனில், சுற்றுலா பயணிகள் மற்றும் கிராமப்புறங்களில் இருந்து வரும் மக்கள் இச்சாலையில் இரு புறங்களிலும் வாகனங்களை நிறுத்தி விடுவார்கள். எனவே, நாள் தோறும் இச்சாலையில் ஒரு காவலரை பணியமர்த்துவது அவசியம் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.