ஒடுகத்தூர், மார்ச் 9: ஒடுகத்தூர் அருகே முன்விரோதம் காரணமாக தொடக்க வேளாண் கூட்டுறவு செயலாளரை அலுவலகத்தில் புகுந்து பீர் பாட்டிலால் தாக்கி மண்டை உடைத்தவரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த ஆசனாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(58), பாக்கம்பாளையத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு அலுவலகத்தில் செயலாளராக பணியாற்றி வருகிறார். இவரது உறவினர் மேல்பள்ளிபட்டு கிராமத்தை சேர்ந்த ஜானகிராமன்(36). அதே பகுதியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றும் இவர் முறைகேடு விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், தனது வேலையை எப்படியாவது திருப்பி வாங்கி கொடுங்கள் என்று வெங்கடேசனிடம் அடிக்கடி ஜானகிராமன் கேட்டுள்ளார். இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் நேற்று முன்தினம் ஜானகிராமன், அலுவலகத்தில் புகுந்து வெங்கடேசனை பீர்பாட்டிலால் தாக்கி மண்டையை உடைத்துவிட்டு தப்பினார். இதுகுறித்து புகாரின் பேரில் வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து ஜானகிராமனை தேடி வந்தனர். இந்நிலையில், குருவராஜபாளையம் பஸ்நிலையம் அருகே பதுங்கியிருந்த ஜானகிராமனை நேற்று போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.