மல்லசமுத்திரம், ஆக.8: மல்லசமுத்திரம் பகுதியில் காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். மல்லசமுத்திரம் பகுதியில் இருந்து தினந்தோறும் சேலம், திருச்செங்கோடு, நாமக்கல், ஈரோடு ஆகிய பகுதிகளுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், அரசு அலுவலகம் மற்றும் தனியார் கம்பெனிக்கு செல்லும் ஊழியர்கள், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் சென்று வருகின்றனர். பயணிகள் கூட்டம் அலை மோதுவதால், பஸ்சில் முண்டியடித்து கொண்டு செல்ல வேண்டி உள்ளது.
மேலும், உயிரை பணயம் வைத்து படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கி செல்லும் நிலை உள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க, பஸ் நிலையத்திற்கு செல்லாமல் மெயின் ரோட்டில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வது வாடிக்கையாக உள்ளது. இதனால் பயணிகள் சிரமப்படுகின்றனர். எனவே, கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.