மதுரை, மே 27: மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள கூடலழகர் பெருமாள் கோயில், வைணவ திவ்ய தேசங்களுள் 47வது தலமாக திகழ்கிறது. இந்த சிறப்பு பெற்ற கோயிலில் வைகாசி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 8ம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. கொடியேற்றத்தை தொடர்ந்து தேவி, பூதேவி வியூக சுந்தரராஜபெருமாள் அங்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தளுளினார். பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
விழாவையொட்டி பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் வரும் 3ம் தேதி நடக்கிறது. அதனை தொடர்ந்து 5ம் தேதி இரவு தசாவதாரம் நடக்கிறது. அதற்காக சுவாமி மதிச்சியம் ராமராயர் மண்டபத்தில் எழுந்தளுகிறார். 6ம் தேதி காலை கருட வாகனத்திலும், மாலையில் குதிரை வாகனத்திலும் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி கமிஷனர் செல்வி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.