ராமேஸ்வரம், அக்.18: பாம்பன் அரசு பள்ளியில் குழந்தை திருமணத்தை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு மற்றும் உறுதி மொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பாம்பன் சின்னப்பாலம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை செல்லம்மாள் தலைமை வகித்தார். கிராமத் தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார்.
பள்ளி மாணவர்களிடையே குழந்தைகள் திருமணம் தடுத்தல், தவிர்த்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் மனிதச்சங்கிலி நடத்தப்பட்டது. குழந்தை திருமணங்களில் ஏற்படும் பாதிப்புகள், குழந்தை திருமண தடைச்சட்டம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தடுத்தல் குறித்து பொதுமக்களிடையே விளக்கப்பட்டது.
மேலும் 2030 ஆண்டுக்குள் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கிட அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் டிஆர்ஆர்எம் திட்ட இயக்குனர் கருப்பசாமி, ஒருங்கிணைப்பாளர் மல்லிகா, வார்டு உறுப்பினர் பாண்டியம்மாள், குழந்தைகள் உதவி மையம் ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் மற்றும் ஆசிரியைகள், பெற்றோர்கள், பொதுமக்கள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.