திருவாரூர், நவ.30: திருவாரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் நடைபெற்ற குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை எதிர்ப்புதின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சாரு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
திருவாரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து கலெக்டர் சாரு கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள், குழந்தை திருமணங்களை தடுத்தல், குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்தல், அனைத்து குழந்தைகளும் பள்ளி செல்லுதல், குழந்தைகள் போதை பொருட்கள் பயன்படுத்தலை தடுத்தல் போன்ற பதாகைகளுடன் பேரணியில் கலந்து கொண்டனர்.
மேலும் குழந்தைகளுக்கான சட்டங்கள், போதைப்பொருளை ஒழித்தல் குறித்து கலைக்குழு மூலம் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பேரணியில் 300க்கும் மேற்பட்ட மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின்கீழ் பணியாற்றும் அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணி விளமல் அரசினர் உயர்நிலை பள்ளியை சென்றடைந்து நிறைவு பெற்றது. முன்னதாக குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான உறுதிமொழியை கலெக்டர் சாரு தலைமையில் அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ சண்முகநாதன், ஆர்.டி.ஒ சங்கீதா, சுகாதார பணிகள் இணை இயக்குநர் செல்வகுமார், குடும்ப நலம் துணை இயக்குநர் உமா, திருவாரூர் நகராட்சி தலைவர் புவனப்பிரியாசெந்தில், ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் வேதநாயகி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராஜன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா புவனா உள்பட பலர் கலந்துகொண்டனர்.