புதுடெல்லி: குழந்தைகளுக்கு எதிரான ஆன்லைன் சைபர் குற்றங்களில் பாலியல் தொடர்பானவை மட்டும் கடந்த 2020ல் 400% அதிகரித்துள்ளதாகவும், அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் பதிவானதாக தேசிய குற்ற ஆவணக் காப்பம் தெரிவித்துள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஆன்லைன் மூலம் நடக்கும் சைபர் குற்றங்களில் கடந்த 2020ம் ஆண்டு மட்டும் நாடு முழுவதும் 842 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 738 வழக்குகள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்கள் ஆகும். குறிப்பாக குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக அணுகுதல், பாலியல் ரீதியாகப் பேசுவது, பாலியல் வீடியோ, படங்கள், வார்த்தைகளை பரிமாறிக் கொள்வது போன்ற வகைகளில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2019ம் ஆண்டில் மட்டும் சைபர் குற்றங்களில் மொத்தம் 164 குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள் பதிவாகியுள்ளன. அதே 2018ம் ஆண்டில் 117 வழக்குகளும், 2017ம் ஆண்டில் 79 வழக்குகளும் பதிவாகியுள்ளன. குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்கள் பட்டியலில் கடந்தாண்டு மட்டும் அதிகபட்சமாக உத்தர பிரதேசம் (170), கர்நாடகா (144), மகாராஷ்டிரா (137), கேரளா (107), ஒடிசா (71) என்ற வரிசையில் மாநிலங்கள் உள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில் 2019ம் ஆண்டுடன் ஒப்பிட்டு பார்த்தால் 2020ம் ஆண்டில் மட்டும் பலமடங்கு (கிட்டத்தட்ட 400 சதவீதம்) பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த காலகட்டத்தில் பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. அதனால், மாணவ, மாணவியருக்கான அனைத்து வகுப்புகளும் ஆன்லைன் மூலம் நடைபெற்றன. மாணவ, மாணவியர் இணையத்தைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போதுதான் ஆன்லைன் சைபர் குற்றங்கள் அதிகரித்ததாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுள்ளனர். மேலும், பெற்றோர்கள், வீட்டில் உள்ள பெரியவர்கள், ஆசிரியர்களின் அலட்சியம் மற்றும் ஒழுக்கமின்மையால் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்ததற்கான காரணங்களாக உள்ளன. இத்தகைய பிரச்னைகளைத் தடுக்க குழந்தைகள் இணையத்தைப் பயன்படுத்துவதை தடை செய்வதை காட்டிலும், அதனால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறுகின்றனர்….