கும்பகோணம், மார்ச்26: கும்பகோணம் ஆதிவராகப்பெருமாள் திருக்கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவத்தை முன்னிட்டு வராக திருக்குளத்தில், அம்புஜவள்ளி தாயார் சமேத ஆதிவராகப்பெருமாள் பல வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய தெப்பத்தில் எழுந்தருள, தெப்போற்சவம் நேற்றிரவு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் நான்கு கரைகளில் இருந்தும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கும்பகோணத்தில் மகாமகப்பெருவிழா தொடர்புடைய 5 வைணவத்தலங்களில் ஒன்றான, அம்புஜவள்ளி தாயார் சமேத ஆதிவராகப்பெருமாள் திருக்கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவத்தின் ஒரு பகுதியாக, நேற்றிரவு கோயில் திருக்குளமான வராக திருக்குளத்தில் பல வண்ண மின்விளக்குகளால் அலங்காரிக்கப்பட்ட அழகிய தெப்பத்தில், புத்தம் புதிய பட்டாடை, பல வண்ண நறுமண மலர் மாலைகள் சூடியபடி, அம்புஜவள்ளி தாயாருடன் ஆதிவராகப்பெருமாள் எழுந்தருள, நாதஸ்வர மேள தாளம் முழங்க, தீபாராதனை செய்யப்பட்ட பின்னர், வானவேடிக்கைகளுடன், தெப்போற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனை வராக திருக்குளத்தின் 4 கரைகளிலும் இருந்தபடி, ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து தரிசனம் செய்தனர்.