சென்னை, அக்.20: வடசென்னை வளர்ச்சியை கருத்தில்கொண்டு ₹1,000 கோடி செலவில், ‘வடசென்னை வளர்ச்சி திட்டம்’ என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வடசென்னையை மொத்தமாக உருமாற்றம் விதமாக இந்த பணிகள் தொடங்க உள்ளன. அங்கே அடிப்படை வசதிகள் தொடங்கி, அல்டிமேட் வசதிகள் வரை பலவற்றை ஏற்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், பல இடங்களில் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ராயபுரம், பேசின் பாலம் சாலை, மின்ட் மேம்பாலம் அருகில், ₹5 கோடி செலவில், 13 ஆயிரத்து 708 சதுர பரப்பில், மாநகராட்சி பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு, புங்கன், நீர்மருது, நாவல், பூவரசு உட்பட 1,000 மரங்களும், மூலிகை செடிகள் நடப்பட்டுள்ளன.
மியோவாக்கி காடுகள், திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், யோகா கூடம், விளையாட்டு திடல், மழை நீர் சேமிப்பு உள்ளிட்ட கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மின்ட் மேம்பாலத்தின் கீழே உள்ள பகுதி, ஒரு காலத்தில் குப்பை குவியலாக மிக மோசமான நிலையில் இருந்தது. தற்போது, இந்த இடத்தை சீரமைத்து, பூங்கா அமைத்துள்ளதால், இந்த இடமே அடையாளம் தெரியாமல் மாறி உள்ளது. இங்கு மியாவாக்கி காடு, செயற்கை நீரூற்று, பசுமையான நடைபாதை, கூழாங்கல் நடை பாதை, விளையாடும் பகுதி மற்றும் மூலிகை தோட்டம் உள்ளது. இந்த பூங்கா வளாகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்க உள்ளார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘வடசென்னையில் பூங்காக்கள் மிக குறைவு. தற்போது இந்த நிலை மாறி வருகிறது. ஒரு காலத்தில் குப்பை கொட்டும் இடமாக இருந்த மின்ட் பூங்காவின் கீழ் பகுதியை சீரமைத்து பசுமை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.இங்கு, வாக்கர்ஸ் பாதை, மூத்த குடிமக்களுக்கான பகுதி, திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் மற்றும் யோகா வசதிகள், சிற்பங்கள் மற்றும் கலை வேலைப்பாடுகள், இழுவை துணி கட்டமைப்புகள், கழிப்பறைகள், பார்க்கிங் மற்றும் பிற வசதிகள் இருக்கும். இந்த பூங்கா, விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்,’’ என்றனர்.