ஈரோடு, டிச.31: ஈரோடு மாவட்டத்தில் போதை பொருள் விற்பனையை தடுக்க மாவட்டம் முழுவதும் போலீசார் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பனியிலும், கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவ்வப்போது, கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர். பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து கடந்த ஒரு வாரமாக பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்த 21 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.99 ஆயிரத்து 567 மதிப்புள்ள 67.95 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் குட்கா விற்பனை செய்த கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.