வேளச்சேரி, ஆக.27: குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றிருந்த சாப்ட்வேர் நிறுவன மேலாளர் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பள்ளிக்கரணை டில்லிபாபு நகரை சேர்ந்தவர் பிரவீன் (45). சாப்ட்வேர் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன், இவர் குடும்பத்துடன் திருவிடந்தை பெருமாள் கோயிலுக்கு சென்றார். நேற்று முன்தினம் இவர்கள் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முதல் மாடியில் உள்ள ஜன்னல் கிரில் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த செயின், மோதிரம், வளையல் உள்பட 60 சவரன் தங்க நகைகள், ரூ.30 ஆயிரம் கொள்ளைப்போனது தெரிந்தது. புகாரின்பேரில், பள்ளிக்கரணை குற்றபிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து, கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். பின்னர் கதவு, பீரோவில் பதிவாகியிருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை சேகரித்து பழைய குற்றவாளிகளின் ரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்து வருகின்றனர். மேலும், சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.