திருவாரூர் : குடவாசலில் உள்ள மீன் விற்பனை கடைகளில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் சண்முகம் தலைமையிலான உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு அழுகிய நிலையில் இருந்த 14 கிலோ மீன்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் தரமற்ற மீன்களை விற்பனை செய்யக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர்.திருவாரூர் மாவட்டத்தில் ரசாயனம் கலந்த மீன்கள் மற்றும் அழுகிய நிலையிலான மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் உத்தரவின்பேரில் நேற்றுமுன்தினம் குடவாசல் மற்றும் கொரடாச்சேரி பகுதிகளில் உள்ள மீன் விற்பனை கடைகளில் உணவுப்பாதுகாப்பு துறை அலுவலர்கள் அன்பழகன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் மீன்வளத்துறை உதவி இயக்குநர் சண்முகம் ஆகியோர் அடங்கிய குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.இதில், கடைகளில் விற்பனை செய்யப்படும் மீன்கள் தரமானதாக உள்ளதா எனவும், விற்பனைக்கு உள்ள மீன்களில் ஏதேனும் இரசாயனம் பயன்படுத்தப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு மேற்கொண்டனர். இதில் குடவாசல் பகுதியில் மேற்கொண்ட ஆய்வின்போது 6 கடைகளில் 14 கிலோ அழுகிய நிலையில் இருந்த மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்து உடனடியாக அந்த மீன்களை அழித்தனர். தொடர்ந்து இதுபோன்ற அழுகிய நிலையில் உள்ள மீன்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் மீன்விற்பனையாளர்களிடம் எச்சரித்தனர்….