செய்துங்கநல்லூர், மார்ச் 13: கீழ வல்லநாட்டில் மாவட்ட அரசு மாதிரி பள்ளி அருகே ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி உள்ளூர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6. 5 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்குடை கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற சண்முகையா எம்எல்ஏ, புதிய பயணியர் நிழற்குடை கட்டும்பணியை அடிக்கல்நாட்டி துவக்கிவைத்தார். இதைத்தொடர்ந்து மாணவ- மாணவிகளிடம் கலந்துரையாடிய அவர், அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்த முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான பல்வேறு திட்டங்களை எடுத்துரைத்தார். மேலும் இவற்றை நன்றாக பயன்படுத்தி கல்வி பயின்று முன்னுதாரணமாக திகழ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அப்போது அனைத்து பஸ்களும் மாதிரி பள்ளி பேருந்து நிறுத்தத்தில் நின்றுசெல்லுமாறு விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட எம்எல்ஏ, அலைபேசியில் சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகளிடம் உடனடியாகத் தொடர்புகொண்டு அனைத்து பேருந்துகளும் பள்ளி முன்பாக நின்றுசெல்ல துரித நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். இதை வரவேற்ற மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்தனர். விழாவில் வைகுண்டம் தாசில்தார் சிவக்குமார், அரசு மாதிரி பள்ளி தலைமை ஆசிரியர் கஜேந்திரன், கருங்குளம் பிடிஓக்கள் முத்துக்குமார், அரவிந்தன், ஒன்றிய பொறியாளர் தளவாய், திமுக ஒன்றியச் செயலாளர்கள் கருங்குளம் வடக்கு ராமசாமி, கிழக்கு சுரேஷ் காந்தி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.