அரியலூர், மார்ச் 11: கீழப்பழுவூர் புதிய பேருந்து நிலையம் அருகே செங்குணம் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியின் கரை பகுதிகளில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த 30 க்கும் மேற்பட்ட புளியமரங்கள் உள்ளன. இந்நிலையில், அந்த புளிய மரங்களுக்கு அடியில் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கொட்டிவந்த குப்பையில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் தீவைத்தனர். இதனால், குப்பையுடன் சேர்ந்து புளியமரத்தின் அடிபாகமும் எரிய தொடங்கியது. நேற்று காலை இதை கண்ட அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்துக்கு தகவல் அளித்தனர். இது குறித்து தகவல் அறிந்த அரியலூர் தீயணைப்புத்துறையினர், கீழப்பழுவூர் போலீசார் அப்பகுதிக்கு விரைந்தனர். எரிந்து கொண்டிருந்த புளிய மரத்தில் தண்ணீர் பீய்ச்சியடித்து அணைத்தனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மின்கம்பிகள் அனைத்தும் மின்சார ஊழியர்களால் அகற்றப்பட்டு, பொக்லைன் இயந்திரம் கொண்டு புளியமரம் அகற்றப்பட்டது. இச்சம்பவத்தால் தஞ்சாவூர் – அரியலூர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.