Friday, May 24, 2024
Home » கி.பி. 7ம் நூற்றாண்டு நடுகல் கண்டெடுப்பு பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தை சேர்ந்தது திருவண்ணாமலை அடுத்த ராந்தம் கிராமத்தில்

கி.பி. 7ம் நூற்றாண்டு நடுகல் கண்டெடுப்பு பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தை சேர்ந்தது திருவண்ணாமலை அடுத்த ராந்தம் கிராமத்தில்

by Karthik Yash

திருவண்ணாமலை, டிச.14: திருவண்ணாமலை அடுத்த ராந்தம் கிராமத்தில் கி.பி. 7ம் நூற்றாண்டு பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தை சேர்ந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அடுத்த ராந்தம் கிராமத்தில் நடுகற்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலர் ச.பாலமுருகன் மற்றும் ஆசிரியர் வையவன், மன்னார்சாமி, சி.பழனிசாமி, சிற்றிங்கூர் ராஜா ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, ராந்தம் கிராமத்தின் பல்வேறு இடங்களில் 4 நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டன. கிராமத்தின் நடுவில் விநாயகர் கோயில் அருகில் புதைந்த நிலையில் கண்டறியப்பட்ட நடுகல்லை, வெளியே எடுத்து சீரமைத்து கல்வெட்டு படியெடுக்கப்பட்டது. இக்கல்வெட்டை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர் சு.ராஜகோபால், இக்கல்வெட்டு பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தை சேர்ந்தது என்பதை உறுதி செய்துள்ளார். மேலும், இக்கல்வெட்டு வட்டடெழுத்து தமிழில் உள்ளது என்றும், அதில் நந்திவர்மனின் 28வது ஆட்சியாண்டில் மண்டை குளநாட்டு மன்னர் உசவகள் மகன் சாத்தன் என்பவர் பூசலில் இறந்துபட்டான் என்று குறிப்பிடுகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: கல்வெட்டில் குறிப்பிடப்படும் நந்திவர்மன் என்பது, வட்டெழுத்து அமைவைக் கொண்டும் ஆட்சியாண்டைக் கொண்டும் 2ம் நந்தி வர்மன் (கி.பி. 759) காலத்தியதாக குறிக்கலாம். இதில், குறிப்பிட்டுள்ள மண்டை குளநாடு என்பது தற்போது போளூர் அருகே மண்டகுளத்தூர் என்று அழைக்கப்படும் ஊராகும். மேலும், கி.பி. 7, 8ம் நூற்றாண்டில் மண்டை குளநாட்டின் தலைநகராக இருந்துள்ளது. இந்த நாட்டுக்கு உட்பட்ட ராந்தம் பகுதியில் நடைபெற்ற கால்நடைகளைக் காக்கும் போரில், மண்டை குளநாட்டு மன்னர் உசவகள் மகன் சாத்தன் என்பவர் இறந்துள்ளார். அதன் நினைவாக, இக்கல் நடப்பட்டுள்ளது. பொதுவாக மற்ற நடுகற்களில் காணப்படும் இறந்த போன வீரனின் உருவம் இந்த நடுகல்லில் இல்லை. எழுத்து மட்டுமே பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வூருக்கு அருகில் உள்ள சொரகுளத்தூர் கிராமத்தில் உள்ள நடுகல்லும், மண்டை குளநாட்டைச் சேர்ந்ததாகும்.
எனவே, மண்டை குளநாடு என்பது போளூர், திருவண்ணாமலைக்கு இடைப்பட்ட பகுதியாக அக்காலத்தில் இருந்துள்ளது. திருவண்ணாமலை பகுதியில், தற்போது கிடைத்துள்ள இந்த நடுகல் கல்வெட்டு மற்றும் அவ்வூரில் கிடைக்கும் கருப்பு, சிவப்பு பானை ஓடு ஆகியவற்றை கொண்டு இப்பகுதி தொன்மையான பகுதி என்றும் தெரியவருகிறது. தமிழக வரலாற்றுக்கு முக்கிய பங்களிக்கும் இதுபோன்ற நடுகற்களை, அரசு ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

16 − fifteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi