வேலூர்: வேலூர் விமான நிலையத்தில் நேற்று டெல்லியில் இருந்து வந்த காலிபர் விமானம் மூலம் லைட்டிங் சிக்னல் உட்பட தொழில்நுட்ப தரவுகள் ஆய்வு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய அரசின் உதான் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள சிறிய நகரங்களை இணைக்கும் வகையில் வேலூர் விமான நிலையம் உட்பட கைவிடப்பட்ட சிறிய விமான நிலையங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான அறிவிப்பு கடந்த 2017ம் ஆண்டு வெளியானது. இதில் வேலூர் அப்பதுல்லாபுரம் விமான நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு பணிகள் தொடங்கி தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. விமான நிலையத்திற்கு சொந்தமாக இருந்த 46 ஏக்கருடன் அரசு புறம்போக்கு நிலம் 52 ஏக்கரை கையகப்படுத்தி மாநில அரசு கொடுத்த நிலையில் தற்போது 97 ஏக்கர் பரப்பளவில் 850 மீட்டர் ஓடுதளத்தில் 748 மீட்டரை விமானங்கள் இறக்கி, ஏற்றவும், மீதமுள்ள இடத்தில் விமான முனையம், தகவல் கட்டுப்பாட்டு அறை, ரேடார் கருவி, சிக்னல் கோபுரம், நிலைய நிர்வாக அலுவலகம், பயணிகள் காத்திருக்கும் அறைகள், பாதுகாப்பு இடம் என 90 சதவீத பணிகள் முடிந்து. தற்போதைக்கு 20 இருக்கைகள் கொண்ட சிறிய விமானங்களை சென்னை, பெங்களூரு, திருப்பதி, திருவனந்தபுரம் நகரங்களுக்கு இயக்க விமான போக்குவரத்து துறை முடிவு செய்தது.