200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவை மீட்க இன்னுயிரை ஈந்தவர்கள் ஏராளம். விடுதலை போராட்ட வீரர்களின் தியாகத்தையும், அவர்களது வீரத்தையும் போற்றும் விதமாக சுதந்திர தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. தாய்மண்ணில் நாம் இன்று சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம் என்றால் அதற்கு முழு முதற்காரணமான நம் தேசிய தலைவர்களின் தியாகங்கள் அளப்பரியது. சும்மா கிடைத்ததா சுதந்திரம் என்னும் மகாகவி பாரதியின் வினாவிற்கேற்ப, ரத்தமும் சதையுமாக வாழ்ந்த போராட்ட வீரர்களின் புகழை நாம் காலமெல்லாம் நினைவு கூர்ந்து வருகிறோம். அதிலும் இந்த 75வது சுதந்திர தின விழா நமக்கு கிடைத்த மாபெரும் மகிழ்வாகும். நம் கொண்டாட்டத்தின் புதியதொரு மைல் கல். நாடு முழுவதும் சில தினங்களுக்கு முன்பே சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. கடந்த ஒரு மாதமாக 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பல்வேறு இடங்களில் பைக் பேரணி, கருத்தரங்குகள், பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. ‘இல்லம்தோறும் தேசியக்கொடி’ என்னும் திட்டத்தை முன்வைத்து ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றிட இந்திய பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார். அதன்படி நாடு முழுவதும் பெரும்பாலான வீடுகளில் தற்போது தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. சுதந்திர தின அமுதப் பெருவிழாவை ஒட்டி சமூக வலைதளங்களிலும் முகப்பு படங்களில் மூவர்ணக் கொடியை வைத்து பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர். சுதந்திர தின பவளவிழாவை முன்னிட்டு நாட்டின் முக்கிய நகரங்கள் இப்போது திருவிழா ேகாலத்தில் ஜொலிக்கின்றன. தமிழகத்தின் தலைநகராக திகழும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் பழமைவாய்ந்த கட்டிடங்களும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்கள் தேசிய கொடிகளோடு மின் விளக்குகளால் மிளிர்கின்றன. மூவர்ண பலூன்களும் நகரின் முக்கிய இடங்களில் தென்படுகின்றன. நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் சுதந்திர தின அமுதப் பெருவிழாவை சுட்டிக்காட்டும் வகையில் செல்பி பாயிண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. 75வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். இன்றைய கொண்டாட்டங்களில் நாடு முழுவதும் பெருங்கூட்டங்களை தவிர்க்க ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளதை நினைவில் கொண்டு பொதுமக்கள் செயல்பட வேண்டும். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பதை கருத்தில் கொண்டு இந்த அமுதப் பெருவிழாவில் நாம் களிகூறுவோம்….