ஊட்டி, நவ. 11: நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் துவங்கிய மழை அவ்வப்போது பெய்து வருகிறது. கடந்த மாதம் சில நாட்கள் மழை குறைந்து காணப்பட்டாலும், மீண்டும் மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, ஊட்டியில் நாள் தோறும் பிற்பகலுக்கு மேல் மழைபெய்து வந்தது. இரவிலும் மழை கொட்டி வந்தது.
மேலும், கடந்த சில தினங்களாக ஊட்டியில் மேக மூட்டம் மற்றும் மழையால் குளிர் அதிகமாக காணப்பட்டது. 2ம் சீசனை அனுபவிக்க வந்த சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், நேற்று காலநிலையில் மாற்றம் ஏற்பட்டது. நேற்று காலையில் இருந்து மாலை வரை ஊட்டியில் வெயில் வாட்டியது. காலநிலை மாற்றத்தால் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். அனைத்து சுற்றுலா தலங்களிலும் நேற்று சுற்றுலா பயணிகள் ஆயாக வலம் வந்தனர். காலநிலை மாற்றத்தால் தீபாவளி பண்டிகை வியாபாரமும் சூடுபிடித்துள்ளது.