கிருஷ்ணகிரி, மே 14: வேப்பனஹள்ளி வழியாக கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற 1200 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் கைப்ற்றி, வாலிபரை கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட பறக்கும் படை தனி தாசில்தார் இளங்கோ மற்றும் அதிகாரிகள், நேற்று அதிகாலை வேப்பனஹள்ளி அருகே சிங்கிரிப்பள்ளி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 24 மூட்டைகளில் 1200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த அரிசியை காருடன் பறிமுதல் செய்தனர்.
அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கிலும், கார் மற்றும் அந்த காரை ஓட்டி வந்த கிருஷ்ணகிரி அடுத்த மூங்கில்புதூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர்(24) என்பவரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜசேகரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், மூங்கில்புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, கர்நாடகாவிற்கு கடத்திச்சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.