காரியாபட்டி, நவ.30: காரியாபட்டி அருகே அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். காரியாபட்டி அருகே கள்ளிக்குடி சாலையில் உள்ள இலுப்பைக்குளம் கிராமத்தில் அழகுநாச்சியம்மன், அய்யனார் கோவில் பொங்கல் விழா மற்றும் குதிரை எடுப்பு திருவிழா நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாக வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை ஊர்வலமாக கொண்டு சென்று ஆற்றில் கரைத்தனர். விழாவை முன்னிட்டு அழகுநாச்சியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் அக்னிசட்டி, மாவிளக்கு எடுத்து, அலகு குத்தி ஊர்வலமாக வந்து அம்மனை வழிப்பட்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக குதிரை எடுப்பு விழா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட குதிரைகளை பக்தர்கள் சுமந்து சென்று கண்மாய் கரையில் உள்ள அய்யனார் கோவிலில் வைத்து வழிபட்டனர். இரவு பெருமாளுக்கு பூஜை செய்யப்பட்டு, ராக்காச்சி அம்மனுக்கு ஆக்கி படைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. குதிரை எடுப்பு திருவிழாவில் மதுரை, திருமங்கலம், விருதுநகர் ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.