நிலக்கோட்டை, ஜன. 30: திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமம் கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை சார்பில் உலகளாவிய தமிழ்ப் பண்பாட்டுப் பரவல் பன்னாட்டுக் கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சென்னை ஐஐடி பொறியியல் பேராசிரியர் அருணாச்சலம் தலைமை வகித்து சிறப்புறையாற்றினார். காந்திகிராமம் கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) எல்.இராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பல்கலை தமிழ்த்துறை தலைவர் முத்தையா வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் இந்நிகழ்ச்சியில் வேலூர், திருவள்ளுவர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஆறுமுகம், கொரியா தமிழ் ஆய்வாளர் கண்ணன் மற்றும் பன்னாட்டு தமிழ் ஆர்வலர்கள், பேராசிரியர்கள் பல்கலை தமிழ் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் சிதம்பரம் நன்றி கூறினார்.