ராமநாதபுரம், செப். 2: முதுகுளத்தூர் அருகே காத்தாகுளம் காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. காத்தாகுளம் காளியம்மன் கோயில் ஆவணி மாத பொங்கல் விழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு அம்மனுக்கு பால், தேன், சந்தனம், விபூதி, இளநீர், பன்னீர், திரவியம், மஞ்சள் உள்ளிட்ட பல வகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
இரவில் பெண்கள் கும்மியடித்தும், ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும் கொண்டாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து குத்துவிளக்கு பூஜை, மாவிளக்கு எடுத்தல், பால்குடம் ஊர்வலம், பால் அபிஷேகம் உள்ளிட்டவை நடந்தது. கடைசி நாளான நேற்று முன் தினம் மாலையில் முளைப்பாரி எடுத்து கிராம வீதிகளில் ஊர்வலமாக வந்து குளத்தில் கரைத்தனர்.