போளூர்: போளூர் அருகே 10 ஆண்டுகளாக காதலித்து திருமணத்துக்கு மறுத்து, காதலிக்கு மாத்திரை கொடுத்து கருக்கலைத்த வாலிபரை புகாரின்பேரில் போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜெகநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம்(35), தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த 33 வயது இளம்பெண்ணும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறிய செல்வம், இளம்பெண்ணுடன் தனிமையில் இருந்துள்ளார்.
இதனால் கர்ப்பமடைந்த இளம்பெண், திருமணத்துக்கு வற்புறுத்தி உள்ளார். ஆனால் கருவை கலைத்தால்தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறிய செல்வம், மாத்திரை வாங்கி கொடுத்து கருவை கலைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் திருமணம் செய்து கொள்ள முடியாது எனக்கூறிய செல்வம் இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து இளம்பெண் போளூர் மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வனிதா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.