கொடைக்கானல், ஏப்.25: கொடைக்கானலில் காட்டு மாடு தாக்கியதில் பள்ளி மாணவன் படுகாயம் அடைந்தார். கொடைக்கானலில் வனவிலங்குகள் நடமாட்டம் சர்வ சாதாரணமாக உள்ளது. குறிப்பாக காட்டு மாடுகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கொடைக்கானல் டிப்போ அருகில் தனது தந்தையின் கடையில் பள்ளி மாணவன் ரியாஸ்(17) நின்று கொண்டு இருந்தான். அப்போது அந்த பகுதி வழியாக காட்டு மாடுகளின் கூட்டம் ஒன்று மிரண்டு ஓடியது. இதில் ஒரு காட்டு மாடு தாக்கியதில் ரியாஸ் படுகாயம் அடைந்தான். சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் தேனி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளான். இது பற்றி வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.