காஞ்சிபுரம், பிப்.9: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் உண்டியல்கள் நேற்று முன்தினம் திறந்து எண்ணப்பட்டன. இதில், ₹45.24 லட்சத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற அத்திவரதர் என அழைக்கப்படும் வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு, ஆண்டுதோறும் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, வட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து விட்டு சென்று வருகின்றனர்.
அவ்வாறு, கோயிலுக்கு வரும் பக்தர்கள் வரதராஜ பெருமாள் கோயிலில் மூலவர், உற்சவர், தாயார், சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்ம சுவாமி உள்ளிட்ட சன்னதிகளில் வைக்கப்பட்டுள்ள உண்டியலில் பணம், நகை, வெள்ளி பொருட்கள், முதலியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்திவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல்களை என்னும் பணி கோயில் வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில், கோயில் அலுவலர்களுடன் சேர்ந்து தொண்டு நிறுவன ஊழியர்களும் உண்டியல் காணிக்கை என்னும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி, பக்தர்கள் காணிக்கையாக 45 லட்சத்து 24 ஆயிரத்து 421 ₹பாய் ரொக்க பணமும், 55 கிராம் தங்கமும், 563 கிராம் வெள்ளியும் காணிக்கையாக பெறப்பட்டிருந்தது. பக்தர்களிடம் காணிக்கையாக பெறப்பட்ட பணம் முழுவதும் எண்ணப்பட்டு வங்கியில் வைப்பு நிதியாக செலுத்தப்பட்டது.