காஞ்சிபுரம், ஆக.9: காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் ₹52 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட 4 மண்டல அலுவலகங்களை உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் திறந்து வைத்தார். காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்களின் வசதிக்காவும், நிர்வாக எளிமைக்காகவும், 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளும் வகையில் பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அந்தந்த பகுதிகளில் மண்டல அலுவலகங்கள் அமைக்க முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அதனால், ஏற்கனவே மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருந்த கட்டிடங்களை தலா ₹13 லட்சம் வீதம் 4 மண்டல அலுவலகங்கள் ₹52 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில், உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர், காஞ்சிபுரம் எம்எல்ஏ ஏழிலரசன் ஆகியோர் கலந்துகொண்டு, ₹52 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சி 4 மண்டல அலுவலகங்களை திறந்து வைத்தனர். இந்த அலுவலகத்தில் மண்டல குழு தலைவரின் உதவியாளர், தட்டச்சர் மற்றும் அலுவலக உதவியாளர்கள் 3 பேர் நியமிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், இந்த மண்டல அலுவலகங்களில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் விண்ணப்பிப்பது, வார்டு பகுதி குறைகள் உள்ளிட்டவைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம். இதன்மூலம் வார்டு பகுதி மக்கள் தங்கள் தேவைகள் குறித்து புகார் தெரிவித்தால், அதனை மாமன்ற உறுப்பினர்கள், மண்டல குழு தலைவர்கள், மேயரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று மக்களின் தேவைகளை அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.
இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொண்டால், மாநகராட்சிக்கு செல்ல வேண்டிய குறைகள் வெகுவாக குறையும். மேலும், புகார் அளிக்கும் மக்கள், மண்டல குழு தலைவர், மாமன்ற உறுப்பினரை சந்திக்க நேராவிட்டாலும், அங்குள்ள அலுவலக உதவியாளரிடம் குறைகளை தெரிவித்தாலும், உடனடியாக பொதுமக்களின் குறைகள் தீர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் துணை மேயர் குமரகுருநாதன், மண்டல குழு தலைவர்கள் சசிகலா கணேஷ், சந்துரு, சாந்தி சீனிவாசன், செவிலிமேடு மோகன், மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ், மல்லிகா ராமகிருஷ்ணன், பூங்கொடி தசரதன், கமலக்கண்ணன், அன்புச்செழியன், கார்த்திக், மாநகராட்சி பொறியாளர் கணேசன், திமுக நிர்வாகிகள், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், பகுதி செயலாளர் திலகர், தசரதன், வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.