தண்டையார்பேட்டை: தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் அமலில் இருப்பதால் காசிமேடு உள்ளிட்ட தமிழகம் முழுவதும் மீனவர்கள் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. ஆனால் பைபர் படகுகள், கட்டுமரங்கள் மூலம் மீன்பிடிக்கின்றனர். காசிமேடு பகுதியில் பிடிக்கப்படும் மீன்கள் ருசியாக இருப்பதால் காசிமேடு மீன்பிடி துறைமுத்தில் பொதுமக்கள் அதிக மீன் வாங்கி செல்வது வழக்கம். மீன்கள் மிக குறைந்த அளவே விற்பனைக்கு வருகின்றன. ஆனால் மீன் வாங்குவதற்காக அசைவ பிரியர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் மீன் வியாபாரிகள் மும்பை, கர்நாடகா, கோவா பகுதிகளில் ஏரி, குளம், கடலில் பிடிக்கப்படும் மீன்களை சென்னைக்கு கொண்டு வந்து பல்வேறு இடங்களில் விற்பனை செய்கின்றனர். பொதுமக்களுக்கு வித்தியாசம் தெரியாததால் காசிமேடு மீன்கள்தான் என வாங்கி செல்கின்றனர்.வானகரம், சிந்தாரிப்பேட்டை, கொருக்குப்பேட்டை ஆகிய பகுதிகளில் வெளிமாநில மீன்கள் விற்பனை செய்யப்படுகிறது. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வெளிமாநில மீன்கள் விற்க ஏற்கனவே தடை உள்ளது. ஆனாலும் இதையும் மீறி ஒரு சில வியாபாரிகள் காசிமேட்டில் மீன்களை விற்று வந்தனர். ஆரம்பத்தில் மீனவர்கள் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் அதிகளவு வெளிமாநில மீன்கள் காசிமேட்டுக்கு வந்ததால், இதை முழுமையாக தடை செய்யவேண்டும் என மீனவர்கள் முடிவு செய்தனர். இந்நிலையில், நேற்று காலை வெளிமாநிலத்தில் மீன்கள் ஏற்றிவந்த வாகனங்களை மார்க்கெட்டுக்குள் விடாமல் மீனவர் சங்கத்தினர் திருப்பி அனுப்பினர். காசிமேடு மார்க்கெட்டுக்கு குறைந்தளவே மீன்கள் வருவதால் மீன்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் ஒருசில அசைவ பிரியர்கள் மீன்கள் வாங்க முடியாமல் திரும்பி சென்றனர்….