இளம்பிள்ளை, மார்ச் 8: இடங்கணசாலையில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் தொடங்கியது. சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி சின்ன ஏரி பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, ₹8 கோடியே 80 லட்சம் மதிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூமி பூஜை போடப்பட்டு, பணிகள் தொடங்கியது. ஆனால், அங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த மாதம் பணி செய்ய வந்த போது, 60 அடி உயர் மின்கோபுர கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனிடையே, நேற்று காலை சேலம் ஏடிஎஸ்பி கண்ணன் தலைமையில், சங்ககிரி டிஎஸ்பி ராஜா முன்னிலையில் மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் தங்கவேல், சங்ககிரி தாசில்தார் அறுவுடைநம்பி, நகராட்சி ஆணையாளர் சேம்கிங்ஸ்டன் மற்றும் பணியாளர்கள் போலீஸ் பாதுகாப்புடன் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணியை மீண்டும் தொடங்கினர்.
இதனையொட்டி, அந்த பகுதியில் தீயணைப்பு துறை மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.