கள்ளிக்குடி, மார்ச் 5: கள்ளிக்குடியில் உள்ள திருமண மண்டபத்தில் பாரம்பரிய வேளாண்மைத் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கான கண்காட்சி நடைபெற்றது. இதற்கு மதுரை வேளாண்மை இணை இயக்குநர் சுப்புராஜ், துணை இயக்குநர் அமுதன் ஆகியோர் தலைமை தாங்கின்ர். கள்ளிக்குடி உதவி இயக்குநர் சந்திரகலா, வேளாண்மை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராணி முன்னிலை வகித்தனர்.
கண்காட்சியில் இயற்கை உரம், பூச்சி மருந்துகள், வளர்ச்சிக்கான விதைகள், இயற்கை சார்ந்த விவசாயப் பொருட்களை இப்பகுதி விவசாயிகள் பார்வையிட்டனர். அவர்களுக்கு இவற்றின் நன்மைகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். தமிழக அரசின் வேளாண்மைத் திட்ட அனைத்து மானியம் சார்ந்த பொருட்களை விவசாயிகள் பெற்றுக்கொள்ள வலியுறுத்தப்பட்டது. தகுதியுள்ள விவசாயிகளுக்கு மானிய விலையில் தார்ப்பாய் மற்றும் விவசாய இடுபொருட்கள் வழங்கப்பட்டது.
விவசாயம் சார்ந்த வினாடி வினா நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் தோட்டக்கலைத் துணை இயக்குநர் ரேவதி, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை மெர்சி ஜெயராணி, மாநிலத்திட்ட வேளாண்மை துணை இயக்குநர் மேரிஐரின் ஆக்னிட்டா, நீர் மேலாண்மை துணை இயக்குநர் கமலாலட்சுமி, வேளாண் அலுவலர் கீதா, வர்த்தக வளர்ச்சி மேலாளர் தவராஜன், துணை வேளாண்மை அலுவலர் குமாரிலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.