புதுடெல்லி: கல்பாக்கத்தில் 500 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கான அதிவேக அணு உலை அமைக்கும் பணியை அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் முடிக்க, திருத்தப்பட்ட புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மக்களவையில் ஒன்றிய விண்வெளி மற்றும் அணுசக்தித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக நேற்று அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: கல்பாக்கத்தில் பாரதிய நபிகியா வித்யுத் நிகாம் லிமிடெட் (பாவினி) மூலம் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான அதிவேக அணு உலை மையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு 2003ம் ஆண்டில் அனுமதி வழங்கப்பட்டது. 2010ம் ஆண்டு செப்டம்பருக்குள் பணிகள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.2003ம் ஆண்டில் இத்திட்டத்திற்கு ரூ.3,492 கோடி ஒதுக்கப்பட்டது. பின்னர், மொத்த செலவு ரூ.5,667 கோடியாக திருத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து 2021ம் ஆண்டில் ரூ.6,840 கோடியாக மீண்டும் செலவுத் தொகை திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன்படி, அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் பணிகளை நிறைவு செய்ய புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. முதற்கட்டமாக, திட்டத்திற்கு முந்தைய நடவடிக்கைகளுக்காக ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்துள்ளன. அதிவேக அணு உலை 1 மற்றும் 2ன் விரிவான வடிவமைப்பு மற்றும் பகுப்பாய்வு பணிகளை இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பான மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், ‘இந்திய அணுசக்தி கழகத்தால் செயல்படுத்தப்பட்ட கூடங்குளம் அணுமின் நிலைய 3 மற்றும் 4வது (2X1000 மெகாவாட்) அணு உலைகளுக்கான பணிகள், கடந்த நவம்பர் மாத நிலவரப்படி, 54.96 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இவை முறையே 2023 மார்ச் மற்றும் 2023 நவம்பரில் நிறைவடையும். அதிவேக உலை எரிபொருள் மறுசுழற்சி மையத்திற்கான திட்டம் அணு மறுசுழற்சி மையம், பாபா அணு ஆராய்ச்சி மையம், அணுவியல் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என கூறி உள்ளார்.* இந்தியாவில் 22 அணு உலைகள் இயங்குகின்றன. இவற்றின் மூலம் 6,780 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.* கூடங்குளம் 3,4வது அணு உலை உட்பட பல்வேறு அணு உலைகள் கட்டப்பட்டு வருகின்றன.** கல்பாக்கம் அதிவேக அணு உலை, உலகின் இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத வகையில், சுற்றுச்சுழலுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட உள்ளது.* 7 ஆண்டுகளில் 40 சதவீத மின் உற்பத்தி அதிகரிப்புஅமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த மற்றொரு பதிலில், ‘‘கடந்த 7 ஆண்டுகளில் நாட்டின் மின் உற்பத்தி திறன் 4,780 மெகாவாட்டில் இருந்து 6,780 மெகாவாட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 40 சதவீதம் அதிகரிப்பாகும். அதே சமயம், கனடா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் ரஷ்யா போன்ற பல்வேறு நாடுகளில் இருந்தும் யுரேனியத்தை இறக்குமதி செய்கிறது,’’ என்றார்.* செமிகண்டக்டர் உற்பத்தி ரூ.76,000 கோடி ஒதுக்கீடுநாட்டில், செமிகண்டக்டர் மற்றும் டிஸ்பிளே போர்டுகளை உற்பத்தி செய்ய ஒன்றிய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் அடுத்த 5-6 ஆண்டுகளில் இத்துறையில் அரசு ரூ.76,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்….