மதுரை, ஜூன் 9: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மதுரையில் மாநில நெடுஞ்சாலையில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெடுஞ்சாலைத்துறையில், 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து மதுரை கோட்டம் மதுரை மேற்கு கட்டுமானம் பராமரிப்பு உட்கோட்டத்தில், திருச்சி – விராலிமலை முதல், மேலூர், மதுரை, அருப்புக்கோட்டை, தூத்துக்குடி நெடுஞ்சாலையோரமாக மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது.
மதுரை வேளாண்மைக் கல்லூரி அருகே நடந்த விழாவிற்கு கண்காணிப்பு பொறியாளர் மாரிமுத்துராஜன் தலைமை வகித்தார். கோட்ட பொறியாளர் சந்திரன் மேற்பார்வையில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதன்படி நேற்று ஒரே நாளில் மதுரை நெடுஞ்சாலைத்துறை கட்டுமான பராமரிப்பு கோட்டத்தில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில், உதவி கோட்ட பொறியாளர் பாண்டியன், குட்டியான், உதவி பொறியாளர் சதீஷ்அஜய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மரக்கன்றுகளை உரிய பணியாளர்கள் மூலம் முறையாக பராமரிக்கவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.