நெல்லை, ஆக.17: முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தின் சார்பில் தொடர் இலக்கிய கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் 5வது கூட்டமாக சிறப்பு பட்டிமன்றம் அருங்காட்சியக காப்பாட்சியர் சத்தியவள்ளி தலைமையில் நடந்தது. கவிஞர் சுப்பையா தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். முனைவர் கணபதிசுப்பிரமணியன் வரவேற்றார். கூட்டத்தில் கலைஞரின் பெரும் புகழுக்கு காரணம் சமூக அக்கறையே! ஆட்சித் திறனே! என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. தமிழ்ச்செம்மல் பாமணி நடுவராக இருந்தார்.
ஆட்சித் திறனே என்ற தலைப்பில் கலை பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் கவிஞர் பாப்பாக்குடி செல்வமணி, சதக்கத்துல்லா கல்லூரி பேராசிரியை பிரியதர்ஷினி, கவிஞர் சக்திவேலாயுதம் ஆகியோரும், சமூக அக்கறையே என்ற தலைப்பில் பேராசிரியை பொன்சக்திகலா, ஆசிரியர் செல்வமாரிமுத்து, கவிஞர் பிரபு ஆகியோரும் பேசினர். கலைஞரின் ஆட்சித்திறன் புகழுக்குரியது என்றாலும் அதற்கெல்லாம் அடிப்படைக் காரணமான அவரது சமூக அக்கறையே பெரும் புகழுக்கு காரணம் என நடுவர் தீர்ப்பளித்தார். எழுத்தாளர் நாறும்பூநாதன் நினைவுப் பரிசுகளை வழங்கினார். குலுக்கல் முறையில் இருவருக்கு கலைஞர் பற்றிய நூல் பரிசாக வழங்கப்பட்டது.
நூற்றாண்டு விழா கூட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கவிஞர்கள் ஜெயபாலன், தச்சைமணி, முத்துவேல், மூர்த்தி, எழுத்தாளர்கள் மு.வெ.ரா, குமாரகபிலன், வள்ளிசேர்மலிங்கம், இலக்கிய அறக்கட்டளை புன்னைச்செழியன், முன்னாள் உதவி ஆட்சியர் தியாகராஜன், புகைப்படக் கலைஞர் துரைராஜ், சுத்தமல்லி திருவள்ளுவர் கழகத் தலைவர் சொக்கலிங்கம், பாடகர் சந்திரபாபு, மருத்துவக் கல்லூரி மாணிக்கவாசகம், சுத்தமல்லி லட்சுமணன், ஓவியர் தங்கவேல், வழக்கறிஞர் மணிமாலா, ஜனனி, கஸ்தூரி, ராமலட்சுமி, ரம்யா, சுரேஷ் அஸ்வின், இருளப்பன் கோபாலகிருஷ்ணன், மேகலிங்கம், பாலசுப்பிரமணியன், கோதைமாறன், காந்திமதிவேலன், கதிர்வேல், சுவாமிநாதன், பேச்சிநாதன், ஜவகர், முத்துராஜ், அக்பர் உள்பட பலர் பங்கேற்றனர். கவிஞர் முத்துசாமி நன்றி கூறினார்.