திருப்பூர், ஜன. 28: கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி திருப்பூர் 8வது வார்டு திமுக மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் விளையாட்டு விழா மற்றும் கோலப்போட்டி நடைபெற்றது. இதையொட்டி 2 நாட்கள் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து 70 அணிகள் பங்கேற்றன. இதேபோல் 8வது வார்டுக்குட்பட்ட கங்காநகர், ராஜாநகர், நஞ்சப்பாநகர், நந்தாநகர், பழனிச்சாமிநகர், மும்மூர்த்திநகர் உள்பட 10 இடங்களில் கோலப்போட்டி நடைபெற்றது.
இதில் 1000 பெண்கள் கலந்து கொண்டு அந்தந்த வீதிகளில், தங்களின் வீடுகளின் முன்பு 900 வண்ணக் கோலங்கள் போட்டு அசத்தினர். இதில் 120 சிறந்த கோலங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் முதல் 3 இடங்களை தேர்வு செய்வதற்கான கோலப்போட்டிகள் நேற்று பழனிச்சாமி நகரில் நடைபெற்றது. இதை கவுன்சிலர் வேலம்மாள், திமுக வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணைத்தலைவர் காந்தி மற்றும் நிர்வாகிகள் பார்வையிட்டனர். கபடி போட்டி மற்றும் கோலப்போட்டியில் வெற்றிப் பெறுபவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது.